போருக்குப் பிந்தைய ஈழத் தமிழர் நிலைமை… நெஞ்சை பிழியும் கொடூரம்

யாழ்ப்பாணம்: பிரபாகரனின் மகனான பாலசந்திரனை சுட்டுக் கொன்ற வீடியோ ஆதாரத்தை ‘சேனல் 4’ வெளியிட்டதை அடுத்து ஈழத்தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விஷயம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. இதனிடையே இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் படும் துயரங்கள் மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளது.

அங்கிருக்கும் சர்வதேச அமைப்பு ஒன்று வெளியிட்ட தகவல்கள் மேலும் நெஞ்சை கிழித்தெறிவதாக உள்ளது.

அந்த அமைப்பு தெரிவித்த தகவல்களாவது;

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

அங்குள்ள பெண்கள் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சிங்கள ராணுவத்தினரின் வெறிக்கு பெண்கள் பலியாக்கப்படுகிறார்கள். இதில் சிறுமிகளும் அடக்கம் என்பது கொடுமையிலும் கொடுமையான விஷயம்.

12 ஆயிரம் ஈழத்தமிழர்கள் காரணமே இன்றி விசாரணை என்ற பெயரில் சிங்கள ராணுவத்தில் சிறைபிடிக்கப்பட்டிருகிறார்கள். அவர்கள் எங்கு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களின் நிலை என்ன? உயிருடன் உள்ளார்களா? என்ற கேள்விகளுக்கு இன்று வரை விடை தெரியவில்லை.

தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள ராணுவத்தினர் சூதாட்ட விடுதிகளையும் மதுபான விடுதிகளையும் திறந்து வைத்து அட்டூழியம் செய்து வருகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் தலையீட்டிற்கு பிறகாவது தமிழீழ மக்களின் வாழ்வில் விடியல் ஏற்படவேண்டும் என்பதே அனைத்து உலகத் தமிழர்களின் வேண்டுதலாக இருக்கிறது.

http://tamil.oneindia.in

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.